நண்பர்கள் மரணம்
நண்பர்கள் மரணம் C. விஜயகுமார்
தமிழ்நாடு

நண்பர் இறந்த தகவல் கேட்ட நிமிடமே உயிரைவிட்ட சகநண்பர்! “நட்புக்காக” படத்தை கண்முன் நிறுத்திய சம்பவம்!

PT WEB

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தலையாமங்கலம் பகுதியை பூர்விகமாக கொண்டவர்கள் சிவராமகிருஷ்ணன் (80) மற்றும் ராமலிங்கம் (82). சிவராமகிருஷ்ணனுக்கு மனைவி, இரண்டு மகன், ஒரு மகளும், ராமலிங்கத்திற்கு மனைவி மற்றும் இரண்டு மகன், இரண்டு மகள்களும் உள்ளனர். தற்போது சிவராமகிருஷ்ணன் மன்னார்குடி அருகே உள்ள நாலாம்தெரு பகுதியிலும், ராமலிங்கம் மன்னார்குடி அருகில் உள்ள அசேஷம் பகுதியிலும் வசித்து வருகின்றனர்.

ஒன்றாக பள்ளி, கல்லூரி படிப்பு - ஒரே நேரத்தில் வேலை-ஓய்வு!

சிவராமகிருஷ்ணன் மற்றும் ராமலிங்கம் இருவரும் பால்ய வயதிலிருந்து இணை பிரியாத நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். மன்னார்குடியில் இருவரும் ஒன்றாக பள்ளி படிப்பை முடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினத்தில் ஒரே அறையில் தங்கி இருவரும் பாலிடெக்னிக் படிப்பை முடித்துள்ளனர்.

பள்ளி நண்பர்கள்

அதைத்தொடர்ந்து ஒரே நேரத்தில் மன்னார்குடி அருகே உள்ள பாமணியில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் இருவரும் வேலைக்கு சேர்ந்துள்ளனர். அதேபோன்று ஒரே நாளில் இருவரும் பணி ஓய்வும் பெற்றுள்ளனர். அதுமட்டுமில்லாமல் இவர்களது இரண்டு குடும்பமும் சேர்ந்து சுப நிகழ்சிகளில் பங்கு பெறுவது, சுற்றுலா செல்வது என அதிக அன்போடு அன்யோன்யமாக இருந்து வந்துள்ளனர்.

நண்பர் இறப்பின் செய்தி கேட்டு அதிர்ச்சியில் உயிரைவிட்ட சகநண்பர்!

இதனையடுத்து இருவரும் அருகருகே உள்ள அசேஷம் மற்றும் நாலாம்தெரு பகுதியில் வசித்து வந்த நிலையில், சிவராமகிருஷ்ணன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை உடல்நலக்குறைவால் சிவராமகிருஷ்ணன் உயிரிழந்துள்ளார். அதையறிந்த அவருடைய நண்பர் ராமலிங்கத்தின் மனைவியும், மகனும் சென்று சிவராமகிருஷ்ணன் உடலை பார்த்துவிட்டு வீடு திரும்பி உள்ளனர்.

நண்பர்கள் மரணம்

அப்போது வந்த ராமலிங்கம் எங்கு சென்று வருகிறீர்கள் என்று கேட்டபோது, சிவராமகிருஷ்ணனின் இறப்பிற்கு சென்று வருவதாக கூறியுள்ளனர். அதனைகேட்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளான ராமலிங்கம் அந்த நிமிடமே அதே இடத்தில் தன் உயிரையும் விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இவர்களது இறுதிச் சடங்கு இன்று நடைபெறவிருக்கிறது.

“நட்புக்காக” படம் போல் நெகிழ வைத்த இரண்டு நண்பர்களின் அன்பு!

பால்ய வயதில் நண்பர்களாகி பள்ளி, கல்லூரி, வேலை என எதிலும் இணைபிரியாமல் உயிருக்குயிராக நண்பர்களாக வாழ்ந்து வந்த இவர்கள். இறப்பிலும் இணைபிரியாமல் ஒருவர் இறந்ததை அறிந்து இன்னொருவரும் உயிரிழந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு சிறந்த நண்பர்கள் ஒன்றாக உயிரிழந்த தகவல் கேட்டு அப்பகுதியில் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நண்பர்கள் மரணம்

மேலும் நட்பிற்கு இலக்கணமாக கூறப்படும் ‘கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையார்’ போன்று இறப்பிலும் இணை பிரியாத இந்த நண்பர்களின் உயிரிழப்பு, அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.