சித்ரா பெளர்ணமியையொட்டி நாளை மறுநாள் திருவண்ணாமலை கிரிவலத்துக்கு மக்கள் வரத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். விழா நாட்களிலும் மற்றும் பெளர்ணமி நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.
இந்நிலையில், கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. கடந்த 40 நாட்களாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், மேலும் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சில தளர்வுகள் வழங்கப்பட்டிருந்தாலும் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதற்கு தடை நீடிக்கின்றது.
இந்த சூழலில், லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடுவார்கள் என்பதால் சித்ரா பெளர்ணமியையொட்டி மே 6ஆம் தேதி நடைபெறவுள்ள திருவண்ணாமலை கிரிவலத்துக்கு மக்கள் வரத்தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளியூர் மக்கள் மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் கிரிவலம் செல்லக் கூடாது என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார்.