தமிழ்நாடு

திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி நிறைவு: படகில் சென்று கண்டுகளித்த சுற்றுலா பயணிகள்

webteam

கன்னியாகுமரி கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை படகில் சென்று கண்டு களித்த சுற்றுலா பயணிகள் இன்று முதல் அனுமதிக்கப்பட்டனர்.

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கடந்த 2000 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி அவர்களால் கடல் நடுவே 133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது, இந்நிலையில், வள்ளுவர் சிலை உப்பு காற்றில் சேதமடைவதை தடுப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசும் பணி நடைபெறுவது வழக்கம் ,

இந்நிலையில், ரூ.1 கோடி செலவில் சிலை பராமரிப்பு பணி கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. இதையடுத்து 133 அடி உயரம் கொண்ட சிலையை சுற்றி தண்ணீர் கொண்டு முழுவதுமாக சுத்தம் செய்து,, சிலையின் இணைப்பு பகுதிகளில் உள்ள வெடிப்புகளை சரி செய்ய சுண்ணாம்பு, கடுக்காய், பனை வெல்லம் ஆகியவை கொண்ட கலவை பூசும் பணி நடைபெற்றது,

இதைத் தொடர்ந்து ஜெர்மன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாக்கர் எனப்படும் ரசாயன கலவை பூசப்பட்டது. இந்தப் பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில், 7 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் திருவள்ளுவர் சிலையை அருகில் சென்று பார்வையிட பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக படகு குழாம் பகுதியில் காத்திருந்தனர்,

இதையடுத்து காலை 8 மணிக்குத் துவங்க வேண்டிய படகு சேவை தாழ்வான கடல் நீர் மட்டம் காரணமாக 2மணி நேரம் தாமதமாக துவங்கப்பட்டது, இதைத் தொடர்ந்து படகில் சென்ற சுற்றுலா பயணிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் திருவள்ளுவர் சிலையின் பாதத்தில் மலர்ந்தூவி மரியாதை செலுத்தினர். இன்று வந்த சுற்றுலா பயணிகளுக்கு திமுக சார்பில் இனிப்பு வழங்கப்பட்டது.

இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், பிரமாண்ட சிலையை அருகில் இருந்து பார்த்தது மிகவும் பிரம்மிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு பாறையை இணைக்கும் பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்தனர்.