சிப்காட் பூங்கா அமைக்க விளை நிலங்களை கொடுக்க முடியாது - விவசாயிகள் எதிர்ப்பு
சிப்காட் பூங்கா அமைக்க விளை நிலங்களை கொடுக்க முடியாது - விவசாயிகள் எதிர்ப்பு pt desk
தமிழ்நாடு

திருவள்ளூர்: சிப்காட் பூங்கா அமைக்க விளை நிலங்களை கொடுக்க முடியாது - விவசாயிகள் எதிர்ப்பு

webteam

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மாநெல்லூர் கிராமத்தில் புதிதாக சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கும் பணிகளை அரசு மேற்கொண்டுள்ளது. இதற்காக கிராமத்தில் உள்ள விளை நிலங்களை அரசு கையகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் அருகே 200-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு கண்டன முழக்கங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

Farmers protest

முப்போகம் விளையக் கூடிய விளை நிலங்களை அரசு கையகப்படுத்திட அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர். விவசாயிகளின் விளைநிலம் மட்டுமல்லாது, ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளையும் கையகப்படுத்துவதால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். தலைமுறை, தலைமுறையாக விவசாயம் செய்து வரும் சூழலில் வேறு தொழிலுக்கும் செல்ல முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலையில் தாங்கள் இருப்பதாக கூறிய அவர்கள், நிலத்தினை விட்டுக் கொடுக்க முடியாது என தெரிவித்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினருடன் இணைந்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்று மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது காவல் துறையினர் அவர்களை பேரணியாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்ல அனுமதிக்க மறுத்ததை அடுத்து வருவாய்த் துறையினர் வந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர்.