தமிழ்நாடு

திருத்தணி:  முருகன் கோவில் கருவறைக்குள் புகுந்த குரங்கு – அலறியடித்து ஓடிய பக்தர்கள்

webteam

திருத்தணி முருகன் கோவில் மூலஸ்தானத்தில் குரங்கு புகுந்ததால் பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர. இந்நிலையில், திருத்தணி மலைப்பகுதியில் இருப்பதால் குரங்குகள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. பக்தர்கள் கூட்டம் அதிகமாகும் போது குரங்குகள் கடித்து இரண்டு பேர் உயிரிழந்த சம்பவமும் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று குரங்கு ஒன்று கோவில் மூலஸ்தானத்தில் புகுந்தது. இதனால் சாமி தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனை அடுத்து அந்த குரங்கை விரட்ட ஊழியர்கள் போராடினர். இதனால் பூஜை மற்றும் அபிஷேகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் திருத்தணி மலைக்கோயில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.