தமிழ்நாடு

அத்தியாவசியத் தேவைக்கு வெளியே வருபவர்கள் குடையோடு வாங்க - திருப்பூர் மாவட்ட ஆட்சியர்

அத்தியாவசியத் தேவைக்கு வெளியே வருபவர்கள் குடையோடு வாங்க - திருப்பூர் மாவட்ட ஆட்சியர்

webteam

திருப்பூரில் அத்தியாவசியப் பொருட்களை வாங்கச் செல்லும் நபர்கள், குடையை பயன்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஊரடங்கு நேரத்தின் போது , அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்லும் நபர்க்ள் , செல்லும் இடத்தில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க , சில இடங்களில் பின்பற்றும் ஒரு புதுவகை ஐடியாவை பின்பற்ற திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் அழைப்பு விடுத்துள்ளார்.

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் நாடு முழுவதும் வரும் மே 3 ஆம் தேதி வரை பொது ஊரடங்கு அமலில் உள்ளது. தினமும் , காய்கறி , மளிகை , போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதால் அந்த நேரத்திற்குள்ளாக அதனை வாங்க பெரும் திரளான மக்கள் வருகிறார்கள்.

அதனால் , காய்கறி , இறைச்சிகள் விற்கும் கடைகளில் தனிமனித இடைவெளி என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இது போன்ற நேரங்களிலும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க செய்யும் நோக்கில் , ஒரு சில நாடுகளிலும் , அண்டை மாநிலமான கேரளாவில் ஒரு புதிய திட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது , அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வரும் நபர்கள் , குடை பிடிக்க வேண்டும் என்பது தான்.

இந்நிலையில் , அது போன்ற செயலை திருப்பூர் மக்களும் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். செவ்வாய்கிழமை இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு உத்தரவு திருப்பூரில் பின்பற்ற படும் நிலையில் , இன்று அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் வரும் நபர்கள் குடை பிடிக்க வேண்டும் என்றும் , அதன் மூலம் தனிமனித இடைவெளி என்பது சாத்தியமாக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் சமூக வலைதளத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.