மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்
மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் file image
தமிழ்நாடு

அரசு பள்ளி மாணவர்களின் வீட்டிற்கு சென்று அதிர்ச்சி கொடுத்த ஆட்சியர் - என்ன காரணம் தெரியுமா?

PT WEB

திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிக்கு வராமல் இடை நின்ற மாணவர்களை வீடு தேடிச் சென்று தனது வாகனத்திலேயே  அழைத்து வந்து பள்ளியில் சேர்த்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும்  அரசுப் பள்ளிகளில் படிப்பு வராத காரணத்தினாலும், குடும்பச் சூழல் காரணமாகவும் பள்ளிக்கு பாதியில் நின்ற மாணவர்களின் விவரங்களை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் சேகரித்துள்ளார்.

மாணவர்களின் வீட்டிற்கு சென்று அழைத்து வந்த போது

இதில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி  ஒன்றியத்துக்கு உட்பட்ட தாசரியப்பனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் 31 பேர் பல்வேறு காரணங்களுக்காகப் படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு, வீட்டில் இருப்பதை அதிகாரிகளின் மூலம் அறிந்துள்ளார் ஆட்சியர்.

மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தனது வாகனத்தில் மாணவர்களை ஏற்றிய போது

அதனடிப்படையில் நேற்று பள்ளி நிர்வாகம் மற்றும் மாவட்ட கல்வித்துறையினருடன் இணைந்து இடைநின்ற மாணவர்களின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று மாணவர்களின் பெற்றோர்களிடம் கல்வியின் அவசியம் குறித்து எடுத்து கூறியுள்ளார். பின்னர் தனது வாகனத்திலேயே அவர்களை அழைத்து வந்து அறிவுரை வழங்கி மாணவர்களை வகுப்பிற்கு அனுப்பி வைத்தார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், "மாவட்டம் முழுவதும் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி இடைநிறுத்தல் காரணமாக வீட்டிலேயே இருந்து வருகின்றனர். அவர்கள் அனைவரையும் மாவட்ட கல்வி நிர்வாகத்தின் சார்பாக நேரடியாக அவர்கள் வீட்டிற்குச் சென்று அவர்களுடைய  குறைகளைக் கேட்டு அறிந்து அதை நிவர்த்தி செய்துள்ளோம். மாணவர்கள் தொடர்ந்து  பள்ளிக்குச் சென்று படிக்கத்  தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

மாவட்ட ஆட்சியரின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.