தமிழ்நாடு

“சூர்யாவின் கருத்தை வரவேற்கிறேன்”- திருநாவுக்கரசர்

Rasus

புதிய கல்விக் கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்தை தான் வரவேற்பதாக காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சூர்யா, “ மூன்று வயதிலேயே மூன்று மொழிக் கல்வி திணிக்கப்படுகிறது. முதல் தலைமுறை மாணவர்கள் இதனை எப்படி சமாளிக்கப்போகிறார்கள்..?. எல்லோரும் அமைதியாக இருந்தால், இது திணிக்கப்படும். புதிய கல்விக் கொள்கை குறித்த வரைவு அறிக்கை மீதான ஆலோசனைகளை, மாற்றங்களை ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊடகங்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், என அனைவருமே ஒன்றிணைந்து உரக்கச் சொல்லுங்கள்” என கூறியிருந்தார்.

சூர்யாவின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியது. சூர்யாவின் இந்த பேச்சுக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், அமைச்சர் கடம்பூர் ராஜு, ஆகியோர் கடுமையாக சாடியிருந்தனர். ஆனால் சூர்யாவின் கருத்துக்கு ரஜினி, கமல் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்தை தான் வரவேற்பதாக காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ புதிய கல்விக் கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்து பொதுவாக எல்லோரும் ஆதரிக்கக்கூடிய கருத்து, எனவே நானும் ஆதரிக்கிறேன், வரவேற்கிறேன். கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய அரசுப் பள்ளிகளின் தரம், இன்னும் அதிகமாக உயர்த்தபட வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.