திருமாவளவன், ராமதாஸ் Pt web
தமிழ்நாடு

”பாமக இருக்கும் கூட்டணியில் இடம்பெற மாட்டோம்” - விசிக தலைவர் திருமாவளவன் திட்டவட்டம்!

ராமதாஸ் தரப்பு பாமகவை திமுக கூட்டணியில் சேர்த்தால், விசிக அக்கூட்டணியில் இருந்து வெளியேறிவிடும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Premkumar S

தமிழக அரசியல் களம் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் வேளையில், தமிழ்நாட்டின் இருபெரும் கட்சிகளாக உள்ள திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் வலுவான கூட்டணியை அமைக்கும் பணிகளில் முழுவீச்சாக ஈடுபட்டு வருகின்றனர். திமுக கூட்டணில் விசிக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ(எம்) உள்ளிட்ட கட்சிகளுடன் மேலும் சில கட்சிகள் உள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜக, அமமுக, பாமக (அன்புமணி தரப்பு) உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. அதேசமயம், தேமுதிக எந்தக் கூட்டணியில் இணையப்போகிறது என்ற முடிவை விரைவில் அறிவிக்கும் தெரிவித்திருக்கிறது.

திருமாவளவன்

இந்த நிலையில் தான், ராமதாஸ் தலைமையிலான பாமக இன்னும் எந்தக் கூட்டணியிலும் இணையாமல் இருக்கிறது. அக்கட்சி சார்பில் தவெகவில் கூட்டணி குறித்து பேசியும், தவெகவிற்கு பெரிய அளவிலான உடன்பாடு இல்லை எனக் கூறப்படுகிறது.

ஆனால், இண்டியா கூட்டணியில் ராமதாஸ் இணைய திமுகவிற்கு எந்த ஆட்சேபனை இல்லை என்றாலும், விசிக இருப்பதால் ராமாதஸை இணைக்க திமுக தயக்கம் காட்டி வந்தது. ஏற்கனவே, 2011 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, விசிகவும் பாமகவும் ஒரு கூட்டணி இணைந்தது கிடையாது என்ற நிலை இருந்துவரும் நிலையில் விசிக தலைவர் திருமாவளவன், பாமகவுடனும் பாஜகவுடனும் கூட்டணி கிடையாது என பல ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்திருக்கிறார். இதன்காரணமாகவே, ராமதாஸை கூட்டணியில் இணைக்க திமுக தயங்கியதாக தெரிகிறது. அதேசமயம், விசிகவை சமாதானப்படுத்த பாமக தரப்பில் இருந்தும் முயற்சிகள் மேற்கொண்டது என சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இதைத்தொடர்ந்து, திமுக கூட்டணியுடன் ராமதாஸ் இணையலாம் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தான், புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு விசிக தலைவர் திருமாவளவன் அளித்தப் பேட்டியில், பாமக திமுக கூட்டணியில் சேர்த்தால்; விசிக அக்கூட்டணியில் இருந்து வெளியேறும் என அறிவித்திருக்கிறார். திருமாவளவனின் இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அவர் பேசுகையில், ”பாஜகவினர் மதத்தின் அடிப்படையில் வெறுப்பு அரசியலை சிறுபான்மையினருக்கு எதிராக பரப்புகின்றனர். பாமகவினர் சாதியின் அடிப்படையில் வெறுப்பு அரசியலை தலித்துகள் மீது பரப்புகின்றனர். எனவே, சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்துகின்றர். இரு சமூகங்களுக்கு இடையே நிரந்தரப் பகையை ஏற்படுத்துகின்ற இந்த இரு கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி அமைக்கமாட்டோம்; மேலும், அவர்கள் அங்கம் வகிக்கு கூட்டணியிலும் இடம்பெறமாட்டோம் .

திருமாவளவன், மு.க. ஸ்டாலின்

இது, இன்றைக்கு நேற்றைக்கு எடுத்த முடிவு கிடையாது. முடிவு எடுக்கக் கூடிய உரிமையும், அதிகாரமும் எங்களுக்கு இருக்கிறது. அதேசமயம், திமுகவை வலியுறுத்த எங்களுக்கு உரிமை இல்லை. அவர்கள் அக்கட்சியினரைக் கூட்டணி வைத்தால் நாங்கள் அந்தக் கூட்டணியில் இருக்கமாட்டோம். இது எங்களுடைய முடிவு” எனத் தெரிவித்திருக்கிறார்.

மேலும், ”எங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதற்கு காரணம், அவ்வப்போது வருகின்றன தேர்தலுக்குகாக நம்முடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளக்கூடாது. கருத்தியல் ரீதியான அரசியல் பயணத்தில் நம்பகத்தன்மையை பாதுகாக்க வேண்டும். அதற்காகவே, எங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்” எனவும் தெரிவித்துள்ளார்.