திருமாவளவன் Pt web
தமிழ்நாடு

”அம்பேத்கரை எதிர்க்க மாட்டார்கள்; ஆனால் அவரின் அரசியலை காலி செய்வார்கள்” - திருமாவளவன் விமர்சனம்!

ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அம்பேத்கரை எதிர்க்க மாட்டார்கள். ஆனால் அவரின் அரசியலை காலி செய்யும் வேலையை செய்து கொண்டிருக்கின்றனர் என விசிக தலைவர் திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Premkumar S

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி உளுந்தூர்பேட்டையில் தமிழ் தேசிய மாநாடு நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த மாநாடு குறித்தான மேற்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய திருமாவளவன், "திடீரென அமித்ஷா வாழ்த்து தெரிவித்ததை பற்றி ஏன் பேசுகிறார் என கேட்கிறார்கள். ஆகஸ்ட் 17 ஆம் தேதி எனது பிறந்தநாள். ஆனால், ஜூலை 17 ஆம் தேதி அமித்ஷா எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததாக நான் தெரிவித்தேன். ரவிக்குமாரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்னவர், திருமாவளவனுக்கு வாழ்த்து சொல்லலாம் என நினைத்திருக்கலாம்" என்றார்.

திருமாவளவன், அமித் ஷா

தொடர்ந்து பேசிய அவர், “எனது பிறந்தநாளை பிறந்தநாளாக கொண்டாடாமல், தமிழ் எனது பிறந்தநாளை பிறந்தநாளாக கொண்டாடாமல், தமிழ் தேசிய அரசியல் எழுச்சி நாளாக கொண்டாடுகிறோம். நாம் தமிழ் தேசிய அரசியல் பேசியதால் தான் அண்ணன் பிரபாகரன் என்னை அடையாளம் கண்டார். சேரிப்புயல் திருமாவளவன் என்று அழைக்கப்பட்ட நான், செம்மொழிச் செல்வம், உலக தமிழின தலைவர் என்றெல்லாம் எனக்கு பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பட்டம் வழங்கியதற்கு காரணம் நாம் தமிழ் தேசிய அரசியல் பேசியதால் தான்.

தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என்று மேலோட்டமாக பார்த்தால் சரிதான். ஆனால் சனாதனத்தை ஏற்றுக்கொண்டவன் ஆண்டால் ஏற்றுக்கொள்ள முடியுமா? சாதி வெறியன் ஆண்டால் ஏற்றுக்கொள்ள முடியுமா? சாதியற்ற முற்போக்கு சிந்தனை கொண்ட தமிழன் ஆண்டால்தான் ஏற்றுக்கொள்ள முடியும். சாதியற்ற தமிழ்நாடு, சாதியற்ற இந்தியா இதுதான் விசிகாவின் கனவு” என்றார்.

தொடர்ந்து, ”பாஜக காரர்கள் இந்து என்கிறார்கள். அடுத்த கேள்வி என்ன சாதி என எழுகிறது. அடுத்து என்ன சாமி கும்பிடுகிறீர்கள் என கேள்வி எழுகிறது. இந்த அடையாள அரசியலை அம்பேத்கர் ஒருபோதும் பேசியதில்லை. ஒரு மனிதனின் சிந்தனை ஒட்டுமொத்த இந்தியாவையும் புரட்டிப்போட்டு கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அம்பேத்கரை எதிர்க்க மாட்டார்கள். ஆனால் அவரின் அரசியலை காலி செய்யும் வேலையை செய்து கொண்டிருக்கின்றனர். அதை புரிந்துகொள்ள அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் கண்ணாடியை போட்டு பார்த்தால்தான் புரியும். மோடி, அமித்ஷா கண்ணாடி போட்டு பார்த்தால் தெரியாது.

நாம் தமிழ் தேசிய மாநாடு நடத்துவதற்கு காரணம், பெரியாரே தமிழன் இல்லை என்று கூறும், பெரியாரே ஒரு மண் என கூறும் வெறுப்பு அரசியலுக்கு எதிராகத்தான். மதவெறி தேசியம் அம்பேத்கரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்தியாவை இந்து நாடு என்றோ, கிறிஸ்துவ நாடு என்றோ, இஸ்லாமிய நாடு என்றோ ஆகிவிட கூடாது என்கிற உயரிய லட்சியம் அம்பேத்கரிடம் இருந்தது.

டாக்டர் பி.ஆர் அம்பேத்கர்

டெல்லியை ஏற்றுக்கொள்ள மாட்டோம், சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி தேர்தலை ஏற்றுக்கொள்ள மாட்டோம், தேசிய கீதத்தை பாட மாட்டோம், வந்தே மாதரம் பாட மாட்டோம், தனி ஒரு தேசத்தை கட்டமைப்போம் என்று ஒரு தமிழ் தேசியம் உள்ளது. அதை விசிக பேசவில்லை. சாதிய கட்டமைப்பை உடைத்து சமத்துவ தமிழ்நாடு என்கிற தமிழ்தேசியத்தைத்தான் நாம் பேசுகிறோம்.

அரசியல் அமைப்புச் சட்டம் வலிமை பெற வேண்டும் என்றால் மாநில சுயாட்சி வலிமை பெற வேண்டும். நம்முடைய இயக்கம் தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அல்ல, மக்களின் தேவைக்காக உருவாக்கப்பட்ட இயக்கம்” எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.