விசிக திருமாவளவன், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முகநூல்
தமிழ்நாடு

”சட்டம் ஒழுங்கில் முதல்வர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்..” - திருமாவளவன்

சட்டம் ஒழுங்கில் முதல்வர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என திருமாவளவன் பேசியுள்ளார்.

PT WEB

நாங்குநேரியில் நடந்த படுகொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த திருமாவளவன், சட்டம் ஒழுங்கில் முதல்வர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார். சமூக விரோத கும்பல்களை கைது செய்ய வேண்டும், மது கடைகளை அகற்ற வேண்டும், காவல் நிலையம் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாங்குநேரியில் நடைபெற்ற படுகொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.

திருமாவளவன்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினரை பார்த்து ஆறுதல் தெரிவித்தோம். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக நிதி உதவியும் அளித்தோம். வட இந்திய இளைஞரின் குடும்பத்திற்கும் நிதி உதவி அளித்துள்ளோம். காயம் அடைந்தவர்களுக்கும் கட்சியின் சார்பாக நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் சில சமூக விரோத கும்பல் ஈடுபட்டுள்ளனர், சில இளைஞர்களை கைது செய்திருக்கிறார்கள். அவர்களை தூண்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

ஒரு கிலோ மீட்டர் பரப்பளவில் 3 மது கடைகள் உள்ளன, அவைகள் அனைத்தையும் அப்புறப்படுத்த வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கை. அதுமட்டுமின்றி ரேஷன் கடை தனியாக தங்களுக்கு வேண்டும் நாடார் சமூகத்து மக்களும் கோரிக்கை எழுப்பி உள்ளார்கள்.

அந்த பகுதியில் உடனடியாக ஒரு காவல் நிலையம் திறக்க வேண்டும் 40, 50 ஆண்டுகளுக்கு மேல் இந்த பிரச்சனை இருக்கிறது எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்கள். மாண்புமிகு முதல்வர் அவர்கள் இந்த பிரச்சனையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

திருமாவளவன் - ஸ்டாலின்

அது மட்டும் இன்றி சிவகங்கையில் இதுபோன்று கிராமத்திற்குள் புகுந்து கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதை கண்டும் காணாமல் காவல்துறையினர் மெத்தனமாக செயல்பட்டு வருவது தான் காரணம். தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வெளிப்படையாக பெண்கள் தங்களின் ஆதங்கத்தை தெரிவித்தார்கள். ஆகவே மாண்புமிகு முதல்வர் சட்டம் ஒழுங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என விடுதலைகள் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம்” என கூறினார்.