திமுக கூட்டணியில் இருந்து இடதுசாரிகள், விசிக போன்ற கட்சிகள் விலகியதற்கு முழுக்க திமுகவின் அணுகுமுறையே காரணம் என திருமாவளவன் குற்றம்சாட்டுகிறார். தவெக தலைவர் விஜய் திமுகவை குறிவைத்து தாக்கியபோதும், அவரை எதிர்த்து வழக்கு பதிவு செய்யாதது பெரிய தவறாக இருந்ததாகவும், இதனால் கூட்டணி பலவீனமடைந்து தேர்தல் தோல்வி ஏற்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.
2026 தேர்தல் முடிவுக்குப் பிறகு திமுக கூட்டணியிலிருந்து விலகிய விசிக, தவெக கூட்டணியில் இணைந்து அமைச்சர்பொறுப்பு ஏற்றது குறித்து கடும் சர்ச்சை எழுந்தது. தொடர்ந்து விசிக மீது திமுக ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். தேர்தலில் தோற்றதற்கு கூட்டணி கட்சிகளை குறைகூறி வருகின்றனர்.
இந்தசூழலில் கூட்டணியை உடைத்ததற்கு திமுகவின் அணுகுமுறையே காரணம் என குற்றஞ்சாட்டியிருக்கும் திருமாவளவன், கூட்டணி கட்சிகளின் நட்பை பேணத் தவறியது திமுக தான் என்றும், தவெகவை சரியாக கோணத்தில் அணுகவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “இடதுசாரிகள் கூட்டணியில் இருந்து விலகியதற்கு திமுகவின் அணுகுமுறையே காரணம். கூட்டணி கட்சிகளை திமுக கையாண்ட விதம்தான் தவறு என ஏன் எந்த நியாயஸ்தர்களும் பேசவில்லை. இப்போது சொல்கிறேன் திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறியதற்கு 100 சதவீதம் திமுக தான் காரணம்.
தவெக தலைவர் விஜய் அன்று திமுகவை மட்டுமே குறிவைத்து தாக்கிப்பேசியபோது, நீங்கள் அவரை நேரடியாக எதிர்க்காததும் தோல்விக்கு காரணம். அன்று நீங்கள் விஜயை எதிர்த்து பேசவில்லை, நான் தான் ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளை என்று பேசினேன். கரூர் சம்பவத்தில் முதல்வர் விஜய் மீது வழக்கு போட சொன்னேன். ஆனால் திமுக வழக்கு போடவில்லை, ஏன் வழக்கு போடவில்லை, அப்போதே விஜயின் அரசியலை அம்பலப்படுத்தியிருக்க வேண்டாமா. ஆனால் திமுக எதுவும் பேசவில்லை. இதெல்லாம் யார் செய்த தவறு, தோல்விக்கு திமுகவின் அணுகுமுறையும், கூட்டணி கட்சிகளிடையே நட்பை பேணிக்காக்காததுமே காரணம்” என்று பேசியுள்ளார்.