தமிழ்நாடு

பாஜக எம்.பி பிரக்யாவின் பேச்சுக்கு மனுநூலின் தாக்கமே காரணம்: திருமாவளவன்

Sinekadhara

"பாஜக எம்.பி பிரக்யா தாகூரை சர்ச்சைக்குரிய வகையில் பேச வைப்பதற்கு எது காரணம்? என்ன பின்னணி" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரும், பாஜக எம்.பியுமான பிரக்யா தாகூர், மத்தியப் பிரதேசத்தில் ஒரு சமூக மாநாடில் கலந்துகொண்டு பேசும்போது, "பிராமணர்களை, பிராமணர்கள் என்று அழைத்தாலோ, ஷத்திரியர்களை ஷத்திரியர்கள் என அழைத்தாலோ, வைசியர்களை வைசியர்கள் என அழைத்தாலோ அவர்கள் தவறாக எண்ணுவதில்லை. ஆனால் சூத்திரர்களை சூத்திரர்கள் என அழைத்தால் மட்டும் அவர்கள் கோவப்படுவது, குற்றமாகக் கருதுவது ஏனோ?" என கேள்வி எழுப்பியிருந்தார். "இது சமூக அமைப்பு பற்றி சூத்திரர்களின் அறியாமையைக் காட்டுகிறது" என்றும் கூறினார்.

சர்ச்சைக்குரிய இந்தப் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனும் கடுமையாக விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் பதிந்த ட்வீட்டில், "மனுச்சட்டம் எங்கே உள்ளது என்று கேட்பவர்கள், பாஜக எம்.பி பிரக்யா தாகூரின் இந்தப் பேச்சைக் கவனிக்கவும். இவரை இப்படி பேசவைப்பதற்கு எது காரணம்? என்ன பின்னணி?

மனுநூலின் தாக்கம் எந்த அளவுக்கு சனாதனவாதிகளை இன்றும் ஆட்டிப்படைக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்!" என்று திருமாவளவன் கூறியுள்ளார்.