விஜய், திருமாவளவன் pt web
தமிழ்நாடு

”விஜயை தனித்து நிற்க வைத்ததே பாஜக தான்..” - திருமாவளவன் விமர்சனம்

தவெக தலைவர் விஜயை தனித்துப் போட்டியிட வைத்தது பாஜக, இஸ்லாமியர்கள் கிறிஸ்துவர்கள் வாக்குகளை சிதறடித்தால் திமுகவின் வெற்றி பாதிக்கப்படும் என பாஜக நினைக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Premkumar S

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு செய்யூரில் பிரசாரம் செய்த விசிக தலைவர் திருமாவளவன், திமுக கூட்டணிக்கு வாக்குகள் சிதறாமல் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இல்லாத நிலையில் இரட்டை இலை பாஜக சின்னமாக மாறிவிட்டதாகவும், எடப்பாடி முதல்வரானால் பாஜக இரண்டு மாதமும் பொறுக்காது அண்ணாமலையை முன்னிறுத்தும் எனவும் குற்றம்சாட்டினார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், திமுக கூட்டணியில் இருக்கும் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தங்கள் கட்சி வேட்பாளர்கள் மட்டுமின்றி கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்துப் பரப்புரை செய்து வருகிறார். அந்த வகையில் தான், இன்று செய்யூர் தொகுதியின் விசிக வேட்பாளர் சிந்தனைச் செல்வனை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார்.

திருமாவளவன் பரப்புரை

அப்பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர், ”விசிக தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 8 இடங்களில் போட்டியிடுகிறது. அனைத்திலும் நாம் வெல்ல வேண்டும். அதில், செய்யூர் முதலாவதாக இருக்க வேண்டும். அதனால், நாம் வாக்குகள் சிதறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அதிமுக தற்போது இல்லை. இரட்டை இலை சின்னம் பாஜகவின் இன்னொரு சின்னமாக மாறிவிட்டது. தப்பித்தவறி கே. பழனிசாமி முதல்வரானால், 2 மாதம் கூட பாஜக பொறுத்துக்கொள்ளாது. எடப்பாடியைத் தூக்கி எறிந்து விட்டு அண்ணாமலையைக் கூட முதல்வராக்குவார்கள். அதேபோல, விஜயை கூட்டணி இல்லாமல் தனியாக நிப்பாட்டி இருப்பதே பாஜக தான். அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும் என பாஜக அழுத்தம் கொடுப்பது என்பதெல்லாம் பொய்.

இஸ்லாமியர்கள் கிறிஸ்துவர்கள் வாக்குகளை சிதறடித்தால் திமுகவின் வெற்றி பாதிக்கப்படும் எனவே, விஜயை தனியாக நிற்க பாஜக கூறியிருக்கிறது. பெரும்பான்மை இல்லாமல் தொங்கு சட்டசபை அமைந்தால், உங்களை முதல்வராக்குகிறோன் என ஆசை வார்த்தை கூறியிருக்கிறதாக கூறப்படுகிறது. இவ்வாறு எந்த ஆட்டத்தையும் ஆடுவதற்கு பாஜக தயாராகியிருக்கிறது. எனவே, வாக்குகள் சிதறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.