கடந்த ஆண்டு நடந்து முடிந்த பிகார் மாநிலத் தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜகவுடன் கூட்டணி வைத்து மொத்தமுள்ள 243 இடங்களில் 202 இடங்கள் மாபெரும் வெற்றி பெற்றது. இதில், 101 இடங்கள் என்ற சமமான எண்ணிக்கையில் பாஜகவும், ஜேடியுவும் போட்டியிட்டிருந்த நிலையில், 89 இடங்களில் பாஜகவும், 85 இடங்களில் ஜேடியுவும் வெற்றி பெற்றது. இந்த சூழலில் தான், பாஜகவில் இருந்து முதலமைச்சர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கபபடுவாரா? அல்லது ஜேடியுவில் இருந்து நிதிஷ் குமார் தேர்ந்தெடுக்கப்படுவரா? என்ற கேள்வி எழுந்த நிலையில் தான், நிதிஷ் குமார் 10 வது முறையாக பிகாரின் முதல்வராக பொறுப்பேற்றார்.
ஆனால், 106 நாட்களே முதல்வராக பதவிவகித்த நிலையில் நேற்று திடீரென பதவி விலகிய அவர் ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார். இந்த சூழலில், நிதிஷ் குமாரின் ராஜினாமாவிற்கு பின்னால் பாஜகவின் அழுத்தம் இருப்பதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, பாஜகவிலிருந்து பிகார் முதல்வர் நியமிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தான், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தற்போது நெருங்கி வருகிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கவுள்ள அதிமுக குறித்து விசிக தலைவர் திருமாவளவன் பல கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, சென்னை எழும்பூரில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு விசிக தலைவர் திருமாவளவன் நோன்பு திறந்தார். தொடர்ந்து, அந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ”இப்தார் நோன்பு ஒரு நாள் தொடங்கி, இரண்டு நாட்கள் கடந்து, சில ஆண்டுகளாக ஐந்து நாட்களாக இப்தார் விரதம் மேற்கொண்டு வருகிறேன். இப்தார் நோன்பு சகோதரத்துவத்தின் அடையாளமாக மேற்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து அதிமுக குறித்துப் பேசிய அவர், ”அண்ணன் எடப்பாடியாரே எச்சரிக்கையாக இருங்கள். எம்ஜிஆர் ஜெயலலிதாவும் கட்டிக் காத்த திராவிட இயக்கமான அதிமுகவை கரைய விட்டு விடாதீர்கள், காப்பாற்றுங்கள். தனித்து நின்றாலே அதிமுகவின் வாக்கு வங்கி மிகப்பெரிய அளவில் கை கொடுக்கும். ஜெயலலிதா அம்மையார் இல்லாமலேயே 65-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. இதை முன்பே நான் கூறினேன். தற்போது, எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வந்தால் அவரால் அந்த பதவியில் அமர முடியுமா? நிதீஷ்குமாரின் கதி எடப்பாடி பழனிச்சாமிக்கு நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.