எளிய மக்களுக்கான கட்சியான விசிகவை உடைக்கச் சதி நடப்பதாக அக்கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். விசிக முதன்மைச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் புதிய கட்சி ஆரம்பிக்கப்போவதாக வெளியான செய்தி தவறானது என்றும் அவர் தெரிவித்தார்.
திருச்சி விமான நிலையத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “அதிமுகவில் என்ன நடக்கிறது என்பதுநமக்கு தெரியவில்லை. இதுஅவர்களுடைய உட்கட்சி விவகாரம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அந்த பதவியை ராஜினாமா செய்கிற அளவுக்கு என்ன உள்ளே நெருக்கடி என்பது அவர்களுக்குதான் தெரியும். இதுமிகுந்த அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாகவும், கவலை அளிக்கக்கூடியஒன்றாகவும் இருக்கிறது. அதிமுக ஒரு திராவிடஇயக்கம் என்ற முறையில் அந்த கட்சி வலுவாகஇருப்பது சிதறாமல் இருப்பதுதான் தமிழ்நாட்டு அரசியலுக்கு நல்லது என்பதை நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். மீண்டும் சொல்கிறேன் ஜெயலலிதாவும் எம்ஜிஆரும் காப்பாற்றிய அதிமுக கட்டுக்கோப்பாக இருந்தால் நல்லது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மைச் செயலாளர் ஆளுநர் ஷாநவாஸ் புதிய கட்சி ஆரம்பித்து திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடப் போகிறார் என வார இதழில் செய்தி வெளியாகியுள்ளது. அந்த வார இதழுக்கு ஏதோ தனிப்பட்ட உள்நோக்கம் உள்ளது. அது தவறான தகவல். அவர், தலைமையோடு தொடர்பில் இருக்கிறார். வெளிநாடு சென்று தற்போது திரும்பி இருக்கிறார். விரைவில் என்னை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. அவருக்கு இருக்கிற வருத்தம் அவரை கலந்து பேசி முடிவு எடுக்கவில்லை என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. என்னைப் பலமுறை அலுவலகத்தில் சந்தித்து இருக்கிறார். ஆனால் திட்டமிட்டு ஒரு நாளேடும் வார ஏடும் திரும்பத்திரும்ப விடுதலை சிறுத்தை மீது குறிவைத்து அவதூறுகளை பரப்பி வருகின்றன. ஏன் இப்படி திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள் என்று விளங்கவில்லை” என்றார்.