தமிழ்நாடு

'திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்'- வள்ளுவர் படங்களை வரைந்து மாணவன் சாதனை

kaleelrahman

தூத்துக்குடியில் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக்கோரி 133 திருவள்ளுவர் படங்களை காகிதத் தட்டில் ஓவியமாக வரைந்து பள்ளி மாணவன் உலக சாதனை படைத்துள்ளார்.

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக்கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த தனுஷ் டார்வின் என்ற பள்ளி மாணவன் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.

தூத்துக்குடி சுப்பையாபுரம் பகுதியில் வசித்து வருபவர்கள் ஆல்வின் - முத்துலட்சுமி தம்பதியர். இவர்களது மகன் தனுஷ் டார்வின், தூத்துக்குடி சிதம்பரம் நகரில் உள்ள சக்தி விநாயகர் இந்து வித்யாலயா பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயது முதலே ஓவியத்தில் ஆர்வம் உடைய இவர், பல்வேறு ஓவிய போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில், திருக்குறள் மீது கொண்ட பற்றால் அதனை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், 133 அதிகாரங்கள் உள்ளதால் 133 திருவள்ளுவர் படங்களை 133 காகித தட்டில் ஓவியமாக வரைந்தார். இரண்டு மணி நேரத்தில் இந்த ஓவியத்தை வரைந்து முடித்தார். புதுச்சேரியில் உள்ள ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் இணையதளம் மூலம் இவரது சாதனையை பதிவு செய்தது.

இந்த சாதனை நிகழ்ச்சிக்குப் பின்னர் தான் ஒரு சிறந்த கார்ட்டூனிஸ்டாக வர வேண்டும் என்பதே தமது விருப்பம் என்று மாணவன் தனுஷ் டார்வின் கூறினார்.