தமிழ்நாடு

திரையரங்குகளில் படத் தலைப்புக்கு முன்பு திருக்குறள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல் 

திரையரங்குகளில் படத் தலைப்புக்கு முன்பு திருக்குறள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல் 

rajakannan

திரையரங்குகளில் திரைப்படத் தலைப்புக்கு முன்பு திருவள்ளூர் படத்துடன் திருக்குறள் ஒளிபரப்பு செய்ய ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் மூலமாக பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் படி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு, 1043 பயனாளிகளுக்கு 3 கோடியே 29 லட்சத்து 37 ஆயிரத்து 650 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். 

இதையடுத்து, அமைச்சர் கடம்பூர் செ.ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், “திரையரங்குகளில் திரைப்படங்கள் திரையிடுவதற்கு முன் திருக்குறள் ஒலிபரப்பப்பட்டு வந்தது. அதேபோல் திரைப்படங்களின் தலைப்புக்கு முன்னதாக திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள் வெளியிடுவதற்கு, தயாரிப்பாளர்கள் சங்க பிரதிநிதிகளிடம் அறிவுறுத்தப்படும். 

முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் வெற்றிடங்களை அவர்கள்தான் நிறைவு செய்ய முடியும். அவர்களுக்கு பின்னர் கட்சியில் வெற்றிடம் இல்லாமல் இருப்பதால் தான் ஆட்சி முழுமையாக செயல்படுத்தப்படுகிறது. தமிழக முதல்வரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் வெற்றிடம் இல்லாமல் கட்சியையும், ஆட்சியையும் மட்டுமல்ல தமிழகத்தையே வழி நடத்தி வருகின்றனர். வெற்றிடம் என்று நினைப்பவர்களுக்கு, அதை நினைக்க உரிமை உண்டு. யாருக்கு வெற்றிடம் எங்கு வெற்றிடம் என்பது அவர்களுக்குத்தான் தெரியும். தமிழகத்தைப் பொருத்தவரை வெற்றிடம் என்பதே இல்லை” என்றார்.