செய்தியாளர்: பே.சுடலைமணி செல்வன்
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய முருகன் கோயில்கள் அனைத்திலும் நேற்று கார்த்திகை தீபத்திருநாள் வழிபாடு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருகோயிலில் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. மேலும் காலையில் மூலவர் மற்றும் சுவாமி ஜெயந்திநாதருக்கு கார்த்திகை சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலையில் மகா மண்டபத்தில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் நாரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி - தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருளினார்.
இதையடுத்து கடற்கரையில் 25 அடி உயர சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. பின்னர் சண்முக விலாச மண்டபத்தில் இருந்த சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து வள்ளி - தெய்வானை அம்பாலுடன் எழுந்தருளி ஜெயந்திநாதர் உள்பிரகாரம் வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.