தமிழ்நாடு

திருச்செந்தூர்: கோயில் கடற்கரையில் கேட்பாரற்று இருக்கும் முருகன் சிலையை பாதுகாக்க கோரிக்கை

kaleelrahman

அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் கேட்பாரற்று கிடக்கும் முருகன் சிலை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்து சமயத்தின் தொன்மையான கடவுளாகவும் தமிழ் கடவுளாகவும் இலக்கியங்கள் போற்றும் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்சீரலைவாய் என்றழைக்கப்படும் திருச்செந்தூர் முருகனின் ஆன்மிக திருத்தலங்களில் புகழ் பெற்றது.

அத்தகு சிறப்பு வாய்ந்த திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் கடந்த மாதம் புகழ் பெற்ற சூரபதுமனை சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இந்நிலையில் கோயில் கடற்கரையில் கடந்த சில வாரங்களாக் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய முருகனின் கற்சிலை ஒன்று கடற்கரை மணலில் பாதி புதையுண்ட நிலையில் கிடக்கின்றது.


தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கடற்கரையில் நீராடி முருகனை வழிபட்டு செல்கின்றனர். ஆனால் இந்த மணல் பகுதியில் திடீரென காணப்படும் முருகனின் சிறிய கற்சிலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அனைவரும் போற்றி வழிபடும் முருகக் கடவுளின் சிலை, எந்த வழிபாடும் இன்றி கடற்கரையில் தூய்மையற்ற சூழலில் இருப்பது பக்தர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

எனவே கோயில் நிர்வாகம் விரைவாக இந்த முருகன் சிலையை அறநிலையத் துறையிடம் ஒப்படைத்து ஆகம முறைப்படி வழிபாடுகள் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையென்றால் இந்த சிலையை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்