தமிழகம் முழுவதும் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ள திரிபுரா சிட்பண்ட்ஸ் நிறுவனத்தின் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் கடலூர், திருச்சி, சிதம்பரம் உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 89 திரிபுரா சிட்பண்ட்ஸ் கிளைகள் இயங்கி வருகின்றன. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 254 கிளைகள் என மொத்தம் 344 கிளைகள் இந்த நிறுவனத்துக்கு உள்ளன. கடந்த பல ஆண்டுகளாக திரிபுரா சிட்பண்ட்ஸ் நிறுவனம் இயங்கி வருவதால் நம்பிக்கையின் பேரில் லட்சக்கணக்கானோர் மாதாந்திர தவணையில் சீட்டுக்கட்டியுள்ளனர். தொடக்கத்தில் பணத்தை முறையாக செலுத்திய நிறுவனம், காலப்போக்கில் பணத்தை திரும்ப செலுத்தாமல் காலம் தாழ்த்தியுள்ளது.
இதையடுத்து பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பொருளாதார குற்றவியல் காவலர்கள், நிறுவனத்தின் இயக்குநர்கள் வேணு, சுமன்னா மற்றும் கிருஷ்ணபிரசாத் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பொருளாதார குற்றவியல் காவல்துறை ஆய்வாளர் ராஜலட்சுமி, பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக வந்து புகார் அளிக்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார். மேலும் புகார் அளித்தால் மட்டுமே நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.