சென்னை சிட்லப்பாக்கம் அருகே வீட்டில் கொள்ளையடிக்க வந்த நபர், சிசிடிவி கேமரா இருப்பதைக் கண்டவுடன் தலையில் அடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச்செல்லும் காட்சி வெளியாகியுள்ளது.
ஜெயா நகரைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் யாரும் இல்லாததையறிந்து, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடந்த 25ஆம் தேதி கொள்ளையடிக்க முயன்றார். வீட்டின் வெளிக்கதவை லாவகமாக திறந்த அந்த நபர், உள்கதவை திறப்பதற்காக அங்குள்ள ஜன்னலில் வைத்திருந்த இரும்புக் கம்பியை எடுத்து வந்தார்.
அப்போது, வீட்டின் முன் சிசிடிவி கேமரா இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மாட்டிக் கொண்டோம் என்ற அச்சத்தில் தலையில் அடித்துக் கொண்ட அவர், எதையும் கொள்ளையடிக்காமல் அங்கிருந்து தப்பிச் சென்றார். இந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு சிட்லப்பாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.