தமிழ்நாடு

‘கடன் தராம அலையவிடுறாங்க’ - நரிக்குறவர் சமுதாய பெண்ணின் மனக்குமுறல்

webteam

பூவிருந்தவல்லியில் சாலையோரம் கடை நடத்தி வரும் நரிக்குறவர் சமுதாயத்திற்கு நகராட்சி மூலம் வழங்கப்படும் கடன் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பூவிருந்தவல்லி நகராட்சிக்கு வந்த இரண்டு நரிக்குறவர் சமுதாய பெண்கள் தாங்கள் சுய தொழில் செய்து பிழைக்க கடன் வசதி தரவில்லை என கண்ணீருடன் புலம்பிச் சென்றுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில், தாங்கள் 6 மாதத்தில் இருந்து 1 வருடம் வரை அலைக்கழிக்கப்பட்டு வருகிறோம். தங்களிடம் அனைத்து ஆவணங்கள் இருந்தும் கடன் வழங்கப்படவில்லை எனக் கூறியுள்ளனர். மேலும் கடந்த முறை 10 ஆயிரம் கடன் பெற்று அதனை முழுமையாக திருப்பிக் கொடுத்தும் தங்களுக்கு கடன் வழங்கவில்லை.

தங்களை போன்றே தங்கள் பகுதியில் பலருக்கு கடன் கொடுக்கவில்லை. எப்போது வந்தாலும் நகராட்சி அதிகாரிகள் மீட்டிங்கில் உள்ளதாகக் கூறி அனுப்பி விடுகின்றனர். தங்களுக்கு கடன் தொகை கிடைத்தால் வரும் பண்டிகை நாட்களில் அதனை வைத்து தாங்களும் பிழைத்து கொண்டு கடன் தொகையையும் திருப்பி செலுத்துவோம் எனக் கூறியுள்ளனர்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், உடனடியாக கடன் தொகை வழங்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.