தமிழ்நாடு

"அரசியல் செய்வதற்காகவே யார், யாரோ தமிழை கையில் எடுக்கிறார்கள்” - அமைச்சர் ஐ.பெரியசாமி

webteam

அரசியல் செய்வதற்காகவே தமிழை யார், யாரோ கையில் எடுக்கிறார்கள் என திருப்பத்தூரில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற கூட்டுறவுத் துறை வார விழாவில் அத்துறையின் அமைச்சர் ஐ.பெரியசாமி பங்கேற்றார். நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “கூட்டுறவுத் துறையை பொறுத்தவரை வரா கடன் என்பது 99 சதவீதம் கிடையாது. தனது சொந்த நிதியில் இயங்கும் கூட்டுறவுத் துறை வங்கிகள், 23 மாவட்டங்களில் லாபத்துடன் இயங்கி வருகிறது.

வட்டி இல்லா கடன் என்பதால், அதிக சேவை, குறைந்த லாபம் என்ற நோக்கத்தில் இயங்கி வருவதாலும் கூட்டுறவுத் துறையில் வரா கடன் மிகவும் குறைவு. இன்னும் 45 நாட்களில் கூட்டுறவுத் துறையில் அனைத்து காலி இடங்களும் நிரப்பப்படும்.

கடந்த பத்து ஆண்டுகளை விட தற்போது ரேஷன் கடைகளில் பாராபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுத்ததன் மூலம் திருட்டு குறைந்துள்ளது. அரசியல் செய்வதற்காகவே தமிழை யார் யாரோ கையில் எடுக்கிறார்கள்” என குற்றம் சாட்டினார்.