தமிழ்நாடு

குடிபோதையில் தொந்தரவு செய்றாங்க ; மதுக்கடையை மூட சொல்லி 30் அரசு பள்ளி மாணவிகள் போராட்டம்

webteam

மதுரை திருப்பரங்குன்றத்தில் அரசு மதுபான கடையை அகற்றக்கோரி அரசு பள்ளி மாணவிகள் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் மதுக்கடையை அகற்றக்கோரி 30-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவிகள், பெற்றோர்களுடன் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே அரசு பள்ளிக்கூடம், சுப்ரமணியசாமி கோவில், அரசு மருத்துவமனை மற்றும் காய்கறி சந்தை உள்ளிட்டவைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் பேருந்து நிலையம் அருகே அதிகளவு மக்கள், பெண்கள், படிக்கும் மாணவிகள் வந்து செல்கின்றனர். ஆனால் இதற்கெல்லாம் இடையூறாக அங்கு நான்கு மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த வழியாக சென்று வரும் பொதுமக்கள் மற்றும் பெண்களிடம், மதுக்கடையில் இருந்து வரும் மது அருந்தியவர்கள் அடிக்கடி தொந்தரவில் ஈடுபடுவதால், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கெல்லாம் மேலாக இரண்டு வாரத்திற்கு முன்பு இந்த வழியாக சென்ற 6ஆம் வகுப்பு மாணவியை அடையாளம் தெரியாத மது அருந்திர நபர் ஒருவர் கையைப் பிடித்து இழுத்து பிரச்சனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து இந்த பிரச்சனை இருந்துவருவதால், இந்த நான்கு டாஸ்மாக் கடைகளையும் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும், இல்லையேல் அகற்ற வேண்டும் என்று கூறி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம், மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த 30-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி பெண்கள், தங்களுடைய பெற்றோர்களுடன் திருப்பரங்குன்றம் பேருந்து நிலையத்தில் சுற்றி இருக்கும் 4 மதுக்கடைகளையும் அகற்றக்கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ரயில்வே தண்டவாளத்தை கடப்பதற்கு பாலம் அமைத்திட கோரியும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.