பழனிக்கு பாதயாத்திரை pt desk
தமிழ்நாடு

பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க கடும் கட்டுப்பாடு!

பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குபவர்கள் உணவு பாதுகாப்புத் துறையிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி இல்லாமல் உணவு வழங்கினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: காளிராஜன்.த

ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பிப்ரவரி 11ஆம் தேதி தைப்பூசத் திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி முருகன் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக செம்பட்டி, நத்தம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் நடந்து வரும் பக்தர்களுக்காக ஏராளமானோர் உணவு சமைத்து அன்னதானம் வழங்கி வருகின்றனர்.

Palani temple

இதுபோன்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குபவர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதன்படி,

  • பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குபவர்கள் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும்

  • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்ட பின்பு சம்பந்தப்பட்ட இடத்தை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும்.

  • பக்தர்களுக்கு கண்டிப்பாக அரை லிட்டர் தண்ணீர் பாட்டில் வழங்கக் கூடாது.

  • அன்னதானம் வழங்க பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்தக் கூடாது.

இதனை மீறுபவர்கள் மீது ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். மேலும், இதனை கண்காணிக்க சுழற்சி முறையில் உணவுத்துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என திண்டுக்கல் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி கலைவாணி தெரிவித்துள்ளனர்.