தமிழ்நாடு

ஆளுநருடன் ரஜினி அரசியல் பேசியதில் தவறில்லை ஆனால்... திருநாவுக்கரசர் எம்பி

webteam

பி.டி.ஆர் மீது செருப்பு வீசிய சம்பவத்திற்கு பொறுப்பேற்று அண்ணாமலை பதவி விலக வேண்டும் என திருநாவுக்கரசர் எம்பி தெரிவித்தார்.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை நினைவு கூறும் வகையில் திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில், திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டார்.

இதையடுத்து வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்...

”இந்த பாதயாத்திரை சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறுவதோடு மட்டுமல்லாமல் தற்போது பா.ஜ.க ஆட்சியின் மக்கள் விரோத செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் நடத்தப்படுகிறது.

மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பா.ஜ.க-வினர் செருப்பு வீசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது காட்டுமிராண்டிதனமான செயல். அமைச்சர் என்றில்லை தனி மனிதர் மீதும் இதுபோன்ற தாக்குதல் நடத்தக் கூடாது. ஒரு கருத்தை மாற்றுக் கருத்தால் தான் எதிர் கொள்ள வேண்டும். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பதவி விலக வேண்டும்.

நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம் ஆனால் ஆளுநருக்கென்று சில வரைமுறைகள் உள்ளது. அதை அவர் பின்பற்ற வேண்டும். ரஜினி அரசியல் பேசியதில் தவறில்லை, ஆளுநர் அரசியல் பேச கூடாது” எனக் கூறியுள்ளார்.