தமிழ்நாடு

ஆட்சியரிடம் மனு அளித்தும் பாதை இல்லை: சடலத்தை வயல்வெளியில் சுமந்து செல்லும் அவலம்

webteam

மதுராந்தகம் அருகே மயானத்திற்குச் செல்ல பாதை இல்லாததால் பல ஆண்டுகளாக வயல்வெளியில் உடலை சுமந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னவெண்மணி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள மக்கள் உயிரிழந்தால் அவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு சுடுகாடு பகுதிக்கு எடுத்துச் செல்ல பாதை இல்லாததால் பல ஆண்டுகளாக விளைநிலங்களில் நெற்பயிர்களை மிதித்தபடி எடுத்துச் செல்கின்றனர் இதனால் விளைநிலங்களும் பாழாகிறது.

இந்நிலையில், மயானத்திற்குச் செல்ல பாதை அமைத்துத் தரக்கோரி பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். ஆனால், இதுவரை பாதை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதையடுத்து இன்று இப்பகுதியில் வசித்த முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது உடலை வயல்வெளியில் இறங்கி மயானத்திற்கு சுமந்து சென்றனர். பல ஆண்டுகளாக இதுபோன்ற நிலைமை இருப்பதாக அப்பகுதி வாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர். சாலை இல்லாததால் வயல்வெளியில் சடலத்தை சுமந்து செல்வதாகவும் தெரிவித்த பொதுமக்கள் சுடுகாட்டுக்குச் செல்ல பாதை அமைத்து தர வேண்டுமென கோரிக்கையாக வைத்தனர்.