தமிழ்நாடு

திருவாரூர்: இடுப்பளவு ஆற்று நீரில் இறங்கி சடலத்தை தூக்கிச் செல்லும் மக்கள்..!

webteam

மயான கொட்டகைக்கு செல்ல சாலை வசதி இல்லாததால், பொதுமக்கள் சடலத்தை ஆற்றில் இறங்கி தூக்கிச் சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் வேலங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கமுகக்குடி கிராமத்தில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 39 ஆயிரம் மதிப்பீட்டில் மயான கொட்டகை அமைத்துக் கொடுக்கப்பட்டது. ஆனால் அதற்கான சாலை வசதி இன்று வரை அமைத்து தரப்படவில்லை. இந்நிலையில் இன்று கமுகக்குடி பகுதியை சேர்ந்த கீதா என்பவர் உடல்நலக்குறைவால் காலமானார். சாலை வசதி இல்லாததால் அவரின் உடலைத் தூக்கிச் சென்றவர்கள் ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் இறங்கியும், குறுவை சாகுபடி செய்த வயலில் பயிர்களை மிதித்தும் சென்றனர்.

இது குறித்து மக்கள் கூறும்போது “ நாங்கள் வயலில் இறங்கி சடலங்களைத் தூக்கிச் செல்வதால் பயிர்கள் அழிவதோடு, அவ்வப்போது நாங்கள் அதில் தடுமாறியும் விழுந்து விடுகிறோம். இதில் பல நபர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பலமுறை வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என பலரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாங்கள் போராட்டம் நடத்தும் பொழுது மட்டும் அதிகாரிகள் வந்து அந்தப் பகுதியை பார்த்துச் செல்வார்கள். பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள்” என்று குற்றம்சாட்டியுள்ளனர்.