தமிழ்நாடு

படிப்புக்கு வயது தடையில்லை: 25-வது பட்டப் படிப்புக்கு விண்ணப்பித்த 82 வயது முதியவர்

kaleelrahman

மயிலாடுதுறை அருகே 82 வயதில் 25வது பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்த முதியவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து விண்ணப்பம் பல்கலைக்கழக துணைவேந்தர் வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்திற்கு அருகில் உள்ள கதிராமங்கலத்தைச் சேர்ந்தவர் குருமூர்த்தி (82) பாலிடெக்னிக் ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்ற இவர், அரசுப் பணியில் இருக்கும்போதே திறந்தவெளி பல்கலைக் கழகங்கள் மூலம் பகுதிநேர மற்றும் அஞ்சல் வழி பட்டைய வகுப்புகள் மற்றும் பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி பகுதிகள் ஆகியவற்றில் சேர்ந்து படித்து வருகிறார்.

படிப்பில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக திருமணம் செய்துகொள்ளாமல் தொடர்ந்து பயின்று வரும் குருமூர்த்தி, இதுவரை பி.ஏ., எம்.ஏ., எம்.பில்., பிஎச்டி என 24 பட்டங்களை பெற்றுள்ளார். ஓய்வு பெறுவதற்கு முன்பு 12 பட்டய படிப்புகளும் ஓய்வு பெற்றதற்குப் பிறகு 12 பட்டயப் படிப்புகளும் படித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் 25-வது பட்டப்படிப்பாக எம்.ஏ போலீஸ் அட்மினிஸ்ட்ரேஷன் என்ற பாடப்பிரிவை தேர்வு செய்து, இன்று திறக்கப்பட்ட தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் விண்ணப்பித்து அதற்கான பாடப் புத்தகங்களை பெற்றுக் கொண்டார். 82 வயதில் 25வது பட்ட படிப்பிற்கு விண்ணப்பம் செய்த குருமூர்த்திக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

நேரம் தவறாமை மற்றும் திட்டமிடல் ஆகியவை தனது படிப்புகளுக்கு மிகவும் உபயோகமாக இருந்ததாக தெரிவிக்கும் குருமூர்த்தி, இளைய தலைமுறையினர் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மூழ்கியிருந்து நேரத்தை வீணடிப்பதாகவும், வாழ்க்கையை அர்த்தத்துடன் வாழ வேண்டும் என்று 22 வயது இளைஞரை போல் உற்சாகத்துடன் தெரிவித்தார்.