தமிழ்நாடு

''தயவு செய்து வெளியில் நடமாட வேண்டாம்'' - காலில் விழுந்து வணங்கும் இளைஞர்கள்!

webteam

ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியில் நடமாடும் முதியவர்களின் காலில் விழுந்து வணங்கி ‘வெளியில் வரவேண்டாம்’ என இளைஞர்கள் அமைப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர்

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நெல்லை, கோவை, திருப்பூர், வேலூர், ராணிப்பேட்டை, தஞ்சை, விருதுநகர், அரியலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மொத்தமாக தமிழகத்தில் 67 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களில் 25 பேர் வெளிநாடு‌கள், வெளியூர்களுக்கு பயணம் செய்யாதவர்கள் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் 43 ஆயிரத்து 537 பேர் ‌தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக உள்ளது. ‌

கொரோனா தொற்று தீவிரமாக பரவாமல் தடுக்க மத்திய மாநில அரசுகள் நாடு முழுவது ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. ஆனால் இதனை பலரும் தீவிரமாக கடைபிடிக்கிறார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

இந்நிலையில் தேனி பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பேரூராட்சி பகுதியில் மக்கள் நடமாட்டம் வழக்கமாக உள்ளதாக கூறப்படுகிறது. அப்பகுதி மக்கள் சமூக விலகலை கடைபிடிக்காமல் வெளியில் நடமாடிக்கொண்டு இருக்கின்றனர்.

அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழுதுகள் என்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள், ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியில் நடமாடும் முதியவர்களின் காலில் விழுந்து வணங்கி ‘வெளியில் வரவேண்டாம்’ என கேட்டுக்கொண்டனர். மேலும் அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் நபர்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டுமென்றும், முகக் கவசம் அணிய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டனர்.