தமிழ்நாடு

தேனி: ஆற்றில் மூழ்கிய மகளை காப்பாற்ற முயன்ற பெற்றோருக்கு ஏற்பட்ட விபரீதம்

kaleelrahman

சின்னமனூர் அருகே உள்ள முல்லைப் பெரியார் ஆற்றில் மூழ்கிய மகளை காப்பாற்ற முயன்ற தாய், தந்தை இருவரும் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

தேனி மாவட்டம் கம்பம் பெரிய பள்ளிவாசல் தெருவில் வசித்து வரும் அபுதாஹீர் என்பவர் தனியார் ஹோட்டலில் வேலை செய்து வருகின்றார். இவரது மனைவி ஆமினா. சுற்றுலா சென்று வரும் வழியில் குழந்தைகள் கேட்டுக்கொண்டதால் முல்லைப் பெரியார் ஆற்றில் குளிக்க இறங்கியுள்ளனர். இதில் 13 வயது மகளை ஆற்று தண்ணீர் இழுத்துள்ளது. அவரை காப்பாற்ற தாயார் ஆமினா தண்ணீரில் இறங்கியுள்ளார்.

இதைப்பார்த்த அபுதாஹிரும் ஆற்றில் இறங்கி, அவரது மகளை காப்பாற்றி பத்திரமாக கரைக்கு கொண்டு வந்து விட்டு அவரது மனைவியை காப்பாற்ற தண்ணீரில் இறங்கியுள்ளார். இதில் எதிர்பாராத விதமாக கணவன், மனைவி இருவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில், ஆமினா சடலமாக மீட்கப்பட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட அபுதாஹிரை, தீயணைப்புத் துறையினரும், காவல் துறையினரும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் கம்பம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்னமனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.