தமிழ்நாடு

தேனி: காணாமல் போன மகளை மீட்டுத்தரக் கோரி பெண் தீக்குளிக்க முயற்சி

kaleelrahman

தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்ய பெட்ரோலுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் தேவாரம் அருகேயுள்ள பல்லவராயன் பட்டியைச் சேர்ந்த பவுன் என்பவரின் மனைவி வனஜோதி (50). இவர் தேனி ஆட்சியரை சந்தித்து மனு வழங்குவதற்காக ஆட்சியர் அலுவகம் வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர், அவரது பையை சோதனை செய்ததில், தற்கொலை செய்வதற்காக தண்ணீர் பாட்டிலில் பெட்ரோலை மறைத்துக் கொண்டு வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார், வனஜோதியை பாதுகாப்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கு நடைபெற்ற விசாரணையில், " எனது மகள் ஏற்கெனவே திருமணமான நிலையில், கடந்த 2 மாதங்களாக காணவில்லை. எனது மகளை அண்ணன் உறவுமுறை கொண்ட முன்னாள் ராணுவ வீரர் கடத்திச் சென்றுவிட்டார். இதுகுறித்து கோம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் எனது மகளை மீட்டு தரக்கோரி தீக்குளிக்க முயன்றேன்” எனத் தெரிவித்தார்.

இது குறித்த தகவல் கோம்பை காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டு மேல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது