வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்து pt desk
தமிழ்நாடு

தேனி | ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்து – 3 பேர் பலி

தேனி அருகே பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பத்து வயது சிறுவன் உட்பட மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், 20 பேர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

PT WEB

செய்தியாளர்: J.அருளானந்தம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் புறவழி பகுதியில் சேலத்தில் இருந்து பக்தர்களுடன் சபரிமலைக்கு சென்று கொண்டிருந்த பேருந்தும், கர்நாடக மாநிலத்தில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 9 ஐயப்ப பக்தர்கள் மற்றும் பேருந்தில் பயணம் செய்த ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்ட 23 பேர் பலத்த காயமடைந்த நிலையில், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த 10 வயது சிறுவன் உட்பட மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 20 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து அல்லிநகரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.