தமிழ்நாடு

தேனி: பாதாளச்சாக்கடை கழிவுநீரோடு கலந்து வீதியில் ஓடும் அம்மா உணவக கழிவுநீர்! மக்கள் வேதனை

webteam

தேனி மாவட்டத்தில் அம்மா உணவக கழிவுநீரும், பாதாளச் சாக்கடை கழிவுநீரும் ஒன்றாக இணைந்து உணவகத்தின் முன்பாக வீதியில் ஓடுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில், நகராட்சியின் 26வது வார்டின் காய்கறி மார்க்கெட் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. மார்க்கெட்டில் பணியாற்றும் கூலி தொழிலாளிகள், சுமை தூக்குவோர், அப்பகுதியின் ஆட்டோ ஓட்டுநர்கள் என அப்பகுதியின் சாமாணிய மக்கள் பலரும் காலை, மதியம் என இரண்டு வேளையும் இங்குதான் நாள்தோறும் சாப்பிடுகின்றனர்.

இந்நிலையில் அம்மா உணவகத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரும், அருகிலுள்ள பாதாளச் சாக்கடை கழிவுநீரும் கலந்து உணவகத்தின் வாயில் முன்பாக கடந்த 10 நாட்களாக பொங்கி வெளியேறி வருகின்றது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, உணவருந்த செல்பவர்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து அம்மா உணவகத்தில் பணியாற்றும் பெண்கள் நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது.

சாலையில் உணவக கழிவுநீர் மற்றும் பாதாளச் சாக்கடை கழிவுநீர் கலந்து வெளியேறுவது குறித்த அப்பகுதி மக்கள் நம்மிடையே கூறுகையில், “உணவகத்தின் வாயில் முன்பாக உணவக கழிவுநீர் மற்றும் பாதாளச் சாக்கடை கழிவுநீர் கலந்து வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது. அதனை மிதித்து உணவகத்திற்குள் உணவருந்த செல்லும் கூலி தொழிலாளிகளுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. சுகாதாரமற்ற முறையில் அம்மா உணவகம் செயல்பட்டு வருவதால் உணவருந்த செல்பவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

இந்தக் கழிவுநீரால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் துர்நாற்றத்துடன் வியாபாரம் செய்ய வேண்டிய நிலையிலும் சாலையில் செல்வோர் துர்நாற்றதுடன் சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலையிலும் இருக்கின்றனர். நிலைமையை சீர்செய்ய நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.