தமிழ்நாடு

‘மேற்கூரையை பிரித்து.. சிசிடிவியை திருப்பி’ - எச்சரிக்கையுடன் கொள்ளையடித்த திருடன்

rajakannan

பெயிண்ட் கடையின் மேற்கூரை வழியாக உள்ளே குதித்த திருடன், தப்பிக்க சிசிடிவி கேமராக்களை திசை திருப்பி கொள்ளையடித்தச் சம்பவம் சென்னை செங்குன்றம் பகுதியில் நடந்துள்ளது. 

செங்குன்றம் அடுத்த காந்திநகர் ஆலமரம் பகுதியில் கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான பெயிண்ட் கடை உள்ளது. வழக்கம் போல கடையை திறந்த போது கல்லாவில் இருந்து ரூ50 ஆயிரம் கொள்ளை போனது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து சோழவரம் போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்துள்ளனர். 

அதில், கொள்ளையன் கடையின் மேற்கூரை வழியாக வந்து சிசிடிவி கேமராக்களை திசை திருப்பி கல்லாவில் இருந்த பணத்தை கொள்ளையடிப்பது பதிவாகியிருந்தது. பின்னர் கொள்ளையன் சிசிடிவி கேமராவை முன்பு இருந்த மாதிரியே திருப்பி வைத்து சென்றதும் பதிவாகி இருந்தது.

இது குறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சோழவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகின்றனர்.