தமிழ்நாடு

அரக்கோணம்: கடை முன்பு இருந்த ஸ்கூட்டியை லாவகமாக திருடிச் சென்ற இளம் பெண் கைது!

webteam

அரக்கோணத்தில் இளம்பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வைரலான நிலையில், திருட்டில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையம் மற்றும் நகரில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருடிச் செல்லும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெருமூச்சு என்றப் பகுதியில் டெய்லர் கடை முன்பாக நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் ஒன்று திருடுப் போனது.

இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசில் இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் புகார் செய்தார். போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இளம் பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது.

அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அரக்கோணம் அடுத்த பாராஞ்சி கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான தமிழ்ச்செல்வி என்பது தெரிந்தது. போலீசார் அவரை கைதுசெய்து அவரிடம் இருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். தமிழ்ச்செல்வியின் கணவர் சுதன் என்பவர் மீதும் திருட்டு வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இளம்பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.