தமிழ்நாடு

விஷம் அருந்துவது போல் வீடியோ வெளியிட்ட பெண் - வித்தியாசமான தண்டனை வழங்கிய நீதிமன்றம் 

webteam

சக ஊழியர்கள் தரக்குறைவாக நடத்துவதால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக நாடகமாடி, சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட பெண்ணுக்கு, நீதிமன்றம் வித்தியாசமான தீர்ப்பை வழங்கியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் கார்த்திகா என்ற பெண், சக ஊழியர்கள் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாகக் கூறி விஷமருந்துவது போல சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

பிறகு இந்த விஷயத்தில் தவறிழைத்தோர் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததாகவும், எனவே தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதில்லை என்றும் அடுத்த நாளே மற்றொரு வீடியோவையும் பதிவிட்டார். இந்நிலையில், இதுகுறித்து விசாரிக்க தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு, காரைக்குடி குற்றவியல் நீதித்துறைக்கு ஆணையிட்டது. 

விசாரணையில் உண்மைத் தன்மையை அறிந்த நீதிபதி, கார்த்திகாவை எச்சரித்தார். மேலும் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு இன்று முதல் ஒரு வாரத்திற்கு மன நல ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் கார்த்திகாவுக்கு வித்தியாசமான தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.