பெண் காவலர்
பெண் காவலர் PT
தமிழ்நாடு

நடிகர் தாமுவின் பேச்சைக்கேட்டு தேம்பி தேம்பி அழுத பெண் காவலர்! நெகிழ்ச்சி வீடியோ!

webteam

பெற்றோர்கள் படும் கஷ்டங்கள் குறித்து நடிகர் தாமு பேசிய போது அரங்கில் இருந்த பெண் காவலர் உட்பட அனைவரும் கண் கலங்கி அழுத சம்பவம் காண்போரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

பெண் காவலர்

தமிழகத்தில் போதை பொருள் பழக்கத்தின் காரணமாக பல்வேறு குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரை போதை பொருட்கள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் தடம்மாறி செல்லும் அவல நிலையும் ஏற்படுகிறது. இதனால் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற திட்டத்தின் பெயரில் நாடு முழுவதும் போதை பொருட்களுக்கு எதிரான தீமைகள் குறித்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

நடிகர் தாமு பேச பேச கலங்கி அழுத பெண் காவலர்!

அந்த வகையில் கொளத்தூரில் ’போதை ஒழியட்டும், பாதை ஒளிரட்டும்’ என்ற தலைப்பில் ஐ.சி.எப் அம்பேத்கர் மன்றத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 6 அரசு பள்ளிகளை சேர்ந்த 1200 மாணவர்களுடன் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரைப்பட நடிகர் தாமு பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உரையாடினார். குறிப்பாக போதை பொருளினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் மிமிக்ரி மூலமாக சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் உரிய விளக்கங்களுடன் எடுத்துரைத்தார்.

பெண் காவலர்

மேலும், “ தாய் தந்தையரே ஹீரோ. எங்களை போன்ற நடிகர்களின் கட் அவுட்களுக்கு பால் ஊற்றாதீர்கள். உங்கள் வாழ்வு சிறக்க வழி ஏற்படுத்தி கொடுத்தது பெற்றோர்களும், பேராசிரியர்களும் தான். நடிகர்களின் பிறந்தநாளை கொண்டாடமல் பேராசிரியர்களை கொண்டாடுங்கள்” என்று பேசினார்.

மேலும், பிறப்பு முதல் கல்லூரி பருவம் வரை பிள்ளைகளை பெற்றோர்கள் பாதுகாப்பது தொடர்பாகவும், மரியாதை தருவது தொடர்பாகவும் மாணவர்களிடையே தாமு உருக்கமாக பேசினார். அப்போது, அரங்கத்தில் இருந்த ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் உட்பட பலரும் கண் கலங்கினர்.

அதிலும்,குறிப்பாக அங்கு பாதுகாப்பில் பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் தாமுவின் பேச்சை கேட்டு தேம்பி, தேம்பி அழுத நெகிழ்ச்சி சம்பவம் அரங்கத்தில் நடந்தது.

அதே போல் அரும்பாக்கத்தில் நடந்த பள்ளி குழந்தையை மாடு முட்டிய சம்பவத்தை குறித்தும் குழந்தையை காப்பாற்றிய நபருக்கும் மற்றும் மருத்துவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் இரண்டு கையை மேலே உயர்த்தி கைத்தட்டி வாழ்த்து தெரிவித்தனர்.