தமிழ்நாடு

விழுப்புரம்: தொடர்மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

kaleelrahman

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுவானூர் கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்து கண் பார்வையில்லாத மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுவானூர் கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் என்பவரின் மகள் வள்ளிநாயகம் (67). இவருக்கு 12 வயதிலேயே கண்பார்வை பறிபோனது. இந்நிலையில், நேற்று இரவு வீட்டுக்கு உறங்கச் சென்ற அவர் காலை 10 மணி வரை வெளியே வராததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சென்று பார்த்தபோது சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக சிறுவானூர் ஏரிக்கரை அருகில் குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக சுவர் இடிந்து இவர் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருவிளையாடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.