ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய பல நிறுவனங்கள் இருந்தும் ஸ்டெர்லைட் ஆலையை பயன்படுத்தி ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு என்ன அவசியம் உள்ளது என தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான ஸ்னோலின் தாயார் வனிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளித்தது, ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் பலியான 16 வயது பள்ளி மாணவி ஸ்னோலின் தாயார் வனிதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது...
“ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிறகு அமைதியாக வாழ்ந்து வருகிறோம். ஆனால் தூத்துக்குடி மக்களை மீண்டும் வன்முறைக்கு இந்த அரசாங்கம் தூண்டி வருகிறது. அரசியல் கட்சியினரும் தேர்தலின் போது மக்களுக்கு அதை செய்கிறோம், இதைச் செய்கிறோம் என வாக்குறுதி அளித்துவிட்டு அவர்களின் தேவை பூர்த்தியானதும் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு விடுகின்றனர்.
கொரோனா வீரியத்தை காரணம் காட்டி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளித்துள்ளனர். இதில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மட்டுமல்ல, தூத்துக்குடி மக்கள் யாருக்குமே துளியும் விருப்பம் கிடையாது. இதனால் அதை எதிர்த்து அறவழியில் போராட நினைக்கும்போது காவல்துறையினர் மூலமாக எங்கள் மீது வன்முறை ஏவப்படுகிறது. காவல்துறையினரை எங்களுக்கு எதிராக்க முயற்சிக்கின்றனர். இந்த முயற்சிகள் கைவிடப்பட வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவ பயன்பாட்டுக்காக ஆக்சிஜன் தயாரிக்க முடியாது என ஒரு தரப்பு வாதம் கூறுகிறது. அப்படியே தயாரித்தாலும் அதற்கு 9 மாதங்கள் ஆகும் என சொல்லப்படும் நிலையில் உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்கு என்ன அவசியம் இருக்கிறது. மருத்துவ பயன்பாட்டிற்காக ஆக்சிஜன் தேவை எனில் அதை தயாரித்து கொடுப்பதற்கு தமிழகத்திலேயே வேறு சில நிறுவனங்கள் உள்ளன. அதை பயன்படுத்தி எடுத்துக் கொள்ளலாம்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை பயன்படுத்தி ஆக்சிஜன் உற்பத்தி செய்யவதால் பிரச்னைகள்தான் உருவாகும். எனவே மக்களின் மனங்களை புரிந்து கொண்டு அரசாங்கம் மக்களுக்கு எது நல்லதோ அதை நல்ல முறையில் செயல்படுத்த நடவடிக்கை எடுத்தால் நல்லது” என்றார்.