தமிழ்நாடு

ஜெயலலிதாவின் சொத்துகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

webteam

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கின் அபராதத் தொகையை வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோரை குற்றவாளிகளாக அறிவித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. 

இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், சசிகலா உள்ளிட்ட மற்ற மூவருக்கு தலா ரூ.10 கோடியும் அபராதமாக பெங்களூரு நீதிமன்றம் விதித்திருந்தது. வழக்கில் மற்ற குற்றவாளிகளான சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் தங்களது தண்டனை காலமான நான்காண்டுகள் சிறை தண்டைனையை அனுபவிக்க பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

முதல் குற்றவாளியான ஜெயலலிதா மறைந்துவிட்டதால், அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். அதேநேரம் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தொகையை வசூலிக்கும் முறை குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை. இதனால் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது. அதில், ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை யாரிடம் வசூலிப்பது என கேட்டிருந்தது. இந்த மனுவையும் உச்சநீதிமன்றம் 2018-ம் ஆண்டு தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் தற்போது  ஜெயலலிதாவின் சொத்துகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் ஜெயலலிதா சொத்துகள் குறித்து கணக்கு எடுக்கத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சொத்துகள் கணக்கெடுப்பட்டு ஏலம் விடப்படலாம் என்றும் அதன் மூலம் அபராதத் தொகையை வசூலிக்க திட்டம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வழக்கறிஞர் ஒருவர், குற்றவாளி உயிருடன் இல்லை என்றாலோ தலைமறைவாகி விட்டாலோ அவரது சொத்துகளை கணக்கெடுத்து ஏலம் விட சட்டத்தில் வழி உள்ளது என தெரிவித்துள்ளார்.