துப்புரவு தொழிலாளிக்கு ஓய்வூதியப் பலன்களை வழங்காமல் வழக்குகள் மூலம் இழுத்தடிக்க முயற்சி செய்வதாக்கூறி தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது உச்சநீதிமன்றம்.
கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் கே. லட்சுமணன். இவர் கடந்த 1992 ம் ஆண்டு துப்புரவு பணியாளராக 105 ரூபாய் ஒருங்கிணைந்த ஊதியத்தில் பணியில் சேர்ந்துள்ளார். கடந்த 02.12.2002 முதல் அவரது சேவைகள் முறைப்படுத்தப்பட்டன பிறகு 30.06.2012 அன்று ஓய்வுபெறும் வயதை அடைந்துள்ளார்
தனது பணி ஒழுங்குபடுத்தப்படுவதற்கு முன் உள்ள சேவையை கணக்கில் எடுத்துக்கொண்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என அவர் விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவ்வாறு கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க அரசு மறுத்ததையடுத்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி , அந்த தொழிலாளிக்கான ஓய்வூதிய பலன்களை வழங்குமாறு 2017ம் ஆண்டு தமிழக பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கினை 2020ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்ததோடு தொழிலாளிக்கான ஓய்வூதிய பலன்களை எட்டு வாரங்களில் வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது
அந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த ஆண்டு மார்ச் 2ம் தேதி தள்ளுபடி செய்தது. இதனையடுத்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்யப்பட்டது.
அதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு, “ஒரு துப்புரவு தொழிலாளர் தனது ஓய்வூதிய உரிமைகளை பெறுவதற்கு ஏற்கனவே பல வழக்குகளை சந்தித்து வந்துள்ளார். தேவையில்லாமல் ஒரு துப்புரவுத் தொழிலாளியின் ஓய்வூதிய உரிமைகள் தொடர்பான விஷயத்தையும் அந்த துப்புரவு பணியாளரையும் மேலும் வழக்குகளுக்குள் இழுத்துச் செல்ல முற்படுகின்றனர்” என தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்ததோடு தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்களை ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்வதாக உத்தரவிடடார்.
இந்த அபராத தொகையை உச்சநீதிமன்ற பணியாளர் சங்க நல நிதிக்கு நான்கு வாரங்களுக்குள் தமிழக அரசு செலுத்த வேண்டும் எனவும் இதுபோன்ற தேவையற்ற, அற்பமான வழக்குகளை தொடர அனுமதி அளித்த அதிகாரிகளிடமிருந்து இந்த அபராத தொகையை தமிழக பள்ளி கல்வித்துறை தேவைப்பட்டால் வசூலித்துக் கொள்ளலாம் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.