தமிழ்நாடு

ஒகி புயல் பாதிப்பு கரை திரும்பாத மீனவர்களின் புள்ளிவிவரம்

ஒகி புயல் பாதிப்பு கரை திரும்பாத மீனவர்களின் புள்ளிவிவரம்

webteam

ஒகி புயல் பாதிப்பால் நேற்று இரவு 7 மணி நிலவரப்படி, 50 படகுகளும், 433 மீனவர்களும் கரை திரும்பவில்லை என்ற புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது.

கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் பலர், ஒகி புயலால் இன்று வரை கரை திரும்பாமல் உள்ளனர். பல மாநிலங்களில் மீட்கப்பட்ட மீனவர்கள் மற்றும் பத்திரமாக கரை சேர்ந்த மீனவர்களின் பட்டியல்களை அரசு வெளியிட்ட பிறகும், இதுவரை ஏராளமான மீனவர்களை காணவில்லை என அவர்களது உறவினர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஒகி புயல் பாதிப்பால் நேற்று இரவு 7 மணி நிலவரப்படி கரை திரும்பாத மீனவர்கள் குறித்த புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, நீரோடி கிராமத்தைச் சேர்ந்த 4 படகுகளும், 39 மீனவர்களும், மார்த்தாண்டம்துறையைச் சேர்ந்த ஒரு படகும் 11 மீனவர்களும் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வல்லாவிளையைச் சேர்ந்த 22 படகுகளும் 223 மீனவர்களும் காணாத நிலையில், இரவிபூந்துறையைச் சேர்ந்த 2 படகுகளும் ஒரு மீனவரும் கரை திரும்பவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. சின்னத்துறையைச் சேர்ந்த 8 படகுகள் மற்றும் 66 மீனவர்களும், தூத்தூரைச் சேர்ந்த 4 படகுகளும் 39 மீனவர்களும், பூத்துறையைச் சேர்ந்த 3 படகுகளும் 28 மீனவர்களும் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொளச்சலைச் சேர்ந்த 2 படகுகளும் 13 மீனவர்களும், முல்லார்துறையைச் சேர்ந்த 2 படகுகளும் கரை திரும்பவில்லை என கூறப்பட்டுள்ளது. மிடாலம் கிராமத்தைச் சேர்ந்த 2 படகுகளும் 13 மீனவர்களையும் சேர்த்து மொத்தம் 50 படகுகள் மற்றும் 433 மீனவர்கள் இதுவரை காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.