தமிழ்நாடு

குடும்பத்தோடு திருப்பதிக்குச் சென்று திரும்பிய விவசாயிக்கு காத்திருந்த அதிர்ச்சி

kaleelrahman

திருவள்ளூரில் குடும்பத்தோடு திருப்பதிக்குச் சென்றிருந்த விவசாயியின் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே புதுகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வெங்கடேசன். இவர் தனது குடும்பத்தாருடன் நேற்று திருப்பதிக்கு சென்று விட்டு இன்று அதிகாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, 3 பீரோக்களும் உடைக்கப்பட்டு அவற்றில் இருந்த 40 சவரன் நகை, ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 50 ஆயிரம் பணம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.

இதனையடுத்து ஊத்துக்கோட்டை காவல் நிலையத்திற்கு அளித்த தகவலையடுத்து கொள்ளை நடந்த வீட்டில் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். கைரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்து வருகின்றனர். நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களை ஊத்துக்கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.