தமிழ்நாடு

வீட்டை ஜப்தி செய்யச் சென்ற வங்கி அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி – நடந்தது என்ன?

webteam

சென்னை அண்ணா நகரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த இரண்டு கை துப்பாக்கிகள் மற்றும் 12 தோட்டாக்களை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அண்ணாநகர் ஐந்தாவது அவென்யூவில் வசிப்பவர் வினிதா குப்தா. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு அண்ணா நகர் பேங்க் ஆப் இந்தியா கிளையில் வீட்டுக் கடன் பெற்றுள்ளார். ஆனால், கடந்த ஏழு வருடமாக வாங்கிய கடனை கட்டாமல் இருந்ததால் தற்போது ஒரு கோடி ரூபாய் அளவிற்கு கடன் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் வங்கியின் சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனால், நோட்டீஸ் கொடுத்தும் அவர் பணத்தை திரும்ப கட்டாததால் பேங்க் ஆப் இந்தியா அதிகாரிகள் வினிதா குப்தாவின் வீட்டை ஜப்தி செய்ய சென்றனர். அப்போது அந்த வீட்டில் இரண்டு கை துப்பாக்கிகளும் 12 தோட்டாக்களும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரிகள் துப்பாக்கியை கைப்பற்றி அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதையடுத்து இந்த துப்பாக்கிகள் உரிமம் இல்லாமல் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது மேலும் பீகார், உத்திரத்பிரதேசம் போன்ற மாநிலங்களில் பயன்படுத்தும் கை துப்பாக்கிகள் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.