தமிழ்நாடு

கோவை வேளாண் பல்கலை.,யில் காவி உடையில் வள்ளுவர் படம்; அமைச்சர் நடவடிக்கைக்கு பின் மாற்றம்

JustinDurai
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த காவி நிறம் கொண்ட திருவள்ளுவரின் படத்தை அகற்றிவிட்டு அரசின் அதிகாரபூர்வமான திருவள்ளுவர் படத்தை மாற்றி நடவடிக்கை எடுத்துள்ளார் அமைச்சர் பன்னீர்செல்வம்.
 
கோவை மருதமலை சாலையில் அமைந்துள்ளது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தில் காவி நிற உடையுடன் கூடிய திருவள்ளுவர் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், காவி நிறம் கொண்ட திருவள்ளுவரின் படத்தை அகற்றிவிட்டு அரசின் அதிகாரபூர்வமான திருவள்ளுவர் படத்தை மாற்றி நடவடிக்கை எடுத்துள்ளார் அமைச்சர் பன்னீர்செல்வம்.
 
இதுகுறித்து தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறுகையில், '' தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நூலகத்தில் 2018 ஆண்டு ஆட்சி செய்த அதிமுக அரசின் சார்பில் காவி நிறம் கொண்ட அய்யன் திருவள்ளுவரின் புகைப்படம் வைக்கப்பட்டது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
 
இந்த புகைப்படம் எனது கவனத்திற்கு வந்தவுடன் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து அந்தப் படத்தை அகற்றிவிட்டு தமிழ்நாடு அரசின் அதிகாரபூர்வமான அய்யன் திருவள்ளுவர் படத்தை அதே இடத்தில் நிறுவப்பட்டது'' எனத் தெரிவித்துள்ளார்.