தமிழ்நாடு

மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தான் தோல்விக்கான காரணம்: பொன்ராஜ்

sharpana

”சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு இருந்தால் 3 ஆவது இடத்தைப் பிடித்திருக்கும்” என்று அக்கட்சியின் துணைத் தலைவர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டை பேட்டையில் அமைந்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் சென்னையை சேர்ந்த முக்கிய வேட்பாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

தோல்விக்கான காரணங்கள் குறித்தும் ஓட்டு சதவீத காரணங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

அதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மையம் துணைத்தலைவர் பொன்ராஜ். ”தேர்தல் பரப்புரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசனின் குறைவான சுற்றுப் பயணங்கள் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்ததே தோல்விக்கு முக்கிய காரணம். தனித்து போட்டியிட்டால் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கலாம்” என்றும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், அவர் ’அனைத்து தொகுதி வேட்பாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடைபெறும் எனவும்.வெற்றி என்ற புள்ளியை தொடுவதே மக்கள் நீதி மய்யத்தின் இலக்கு. 234 தொகுதியிலும் போட்டியிடுவதற்கான போதிய பொருளாதார வசதி இல்லை. கட்சியின் தொண்டர்களை கடன்காரர்களாக மாற்ற கூடாது என்பதற்காகவே கூட்டணி வைத்தோம். ஆனால், அது கைகொடுக்கவில்லை. தற்போது வாங்கிய 12 லட்சம் வாக்குகளை விட 10 மடங்காக உயர்த்த மீண்டும் பணி புரிவோம்” என்று கூறினார்.

இந்த ஆலோசனையில் விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் சினேகன், சிங்கநல்லூர் தொகுதி வேட்பாளர் மகேந்திரன், சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளர் சினேகா மோகன்தாஸ் மற்றும் அண்ணா நகர் தொகுதி வேட்பாளர் பொன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.