ஓசூரில் அலங்காரப் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. உற்பத்தி குறைவான சூழலில், விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், பசுமைக்குடில் மூலமாகவும் திறந்தவெளிப் பகுதிகளிலும் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் அலங்காரப் பூக்கள் சாகுபடி நடக்கிறது. கோயில் விழாக்கள், திருமண விழாக்கள், சுப நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் ரோஜா, கார்னேஷன், ஜெர்பரா போன்ற அலங்கார மலர்களுக்கு தேவை அதிகரித்துள்ளது. இதனால் அவற்றின் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. 20 பஞ்ச் கொண்ட ரோஜா மலர் 400 முதல் 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஜெர்பரா 150 முதல் 180 ரூபாய் வரையும் காரனேசன் பூக்கள் 400 முதல் 450 ரூபாய் வரையும் வண்ண சாமந்தி பூக்கள் 200 முதல் 300 ரூபாயும் வரையும் விற்கப்படுகிறது.
தொடர் மழையாலும், குளிராலும் விளைச்சல் பாதிக்கப்பட்டாலும், நல்ல விலை கிடைப்பதாக கூறுகிறார்கள் விவசாயிகள். மேலும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சமயத்தில் மேலும் விலை உயரும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் விவசாயிகள்.