பெரியபாளையம் அருகே ஆரணியாற்றில் போக்குவரத்து தடை செய்யப்பட்ட தரைப்பாலத்தை கடக்க முயன்ற நபர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த காரணி பகுதியைச் சேர்ந்த முனிரத்தினம் என்பவர், இனிப்பகம் ஒன்றில் சமையலராக பணியாற்றி வந்துள்ளார். ஆரணியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக காரணி கிராமத்திற்குச் செல்லும் தரைப்பாலத்தில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முனிரத்தினம் மதுபோதையில் ஆற்றை கடக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதில், திடீரென ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அவர், மரக்கிளையை பிடித்து தொங்கியுள்ளார். இதுகுறித்து காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் உதவியுடன் ஆற்று வெள்ளத்தில் சிக்கித்தவித்த முனி ரத்தினத்தை பெரியபாளையம் காவல் துறையினர் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து சடலத்தை உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பெரியபாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மதுபோதையில் போக்குவரத்து தடை செய்யப்பட்ட தரைப்பாலத்தை கடக்க முயன்ற நபர் ஆற்று வெள்ளத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.